Udhagamandalam 27 July 2018 : நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
தொட்டபெட்டா ஊராட்சிக்குட்பட்ட சின்கோனா பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.3.00 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் 400 மீட்டர் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியினையும், தும்மனட்டி ஊராட்சி முனியாபுரம், எப்பநாடு ஊராட்சி கோயில்மேடு, கங்கா நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடர் பழங்குடியினர்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு, போக்குவரத்து வசதி போன்றவை உள்ளனவா என்றும் சுகாதாரம் குறித்தும் ஆய்வு செய்து அப்பகுதி பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.18.00 இலட்சம் மதிப்பில் 1500 சதுர அடியில் கட்டப்பட்டு வரும் தூனேரி ஊராட்சி அலுவலக கட்டிட பணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.
மேலும் வேளாண் பொறியியல் துறை சார்பில் கடநாடு ஊராட்சிக்குட்பட்ட பெந்தட்டி பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12.00 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 2010 மீட்டர் வெள்ள தடுப்பு மேம்படுத்துதல் பணிகளையும், ஆக மொத்தம் ரூ.33.00 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்து பார்வையிட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பணிகளை விரைவில் முடிக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) திருமதி.சுமதி, செயற்பொறியாளர் திரு.பசுபதி, வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் திரு.பாலசுப்ரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ராமன், திரு.நாகராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.










