Udhagamandalam 09 August 2018 :நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நஞ்சநாடு ஊராட்சிக்குட்பட்ட பசவகல் பகுதியில் பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் தலா ஒரு பயனாளிக்கு ரூ.1.70 வீதம் ரூ.3.40 இலட்சம் மதிப்பில் 300 சதுர அடியில் கட்டப்பட்டு வரும் இரண்டு வீடுகளையும், குருத்துக்குளி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.00 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் 40 மீட்டர் நடைபாதை அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் அப்பகுதியில் பொதுசுகாதாரம் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இத்தலார் ஊராட்சிக்குட்பட்ட கல்லக்கொரை, மற்றும் நஞ்சநாடு மேல்நிலைப்பள்ளி அருகில் சாய்வான பகுதியில் மரம் வளர்வதற்கு ஏதுவாக நீர்குழி அமைக்கும் பணியினை பார்வையிட்டார். இந்த நீர்குழிகள் அமைத்தல் மூலம் மழை காலங்களில் மழைநீர் வீணாகாமல் மரம், செடி, கொடிகள் வளர பயன்பெறும்.
இந்த ஆய்வின் போது உதகை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ராமன், திரு.நாகராஜ், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.











